

பால் உழவர்களுக்கு ஊக்கத்தொகை?
Aavin milk producers denied Rs. 200 crore incentive, Is this DMK govt's 'deceptive' policy Anbumani Ramadoss condemns : ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.200 கோடி ஊக்கத்தொகை 4 மாதங்களாக வழங்கப்படவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில். “ தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உழவர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை.
ரூ.200 கோடி நிலுவை
மொத்தம் ரூ.200 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை அதிகரித்திருக்கும் நிலையில் அதை வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது.
ஊக்கத்தொகை தருவதில் ஏன் தாமதம்?
இதை பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததைத் தொடர்ந்து பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படவில்லை.
4 லட்சம் உழவர்கள் பாதிப்பு
கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் ஆகிய மாதங்களுக்கு மட்டும் ரூ.200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை ; இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 4 லட்சம் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட போது, அதை தமிழக அரசே வழங்கும் என்று தான் கூறப்பட்டது.
நலிவில் பால் கூட்டுறவு சங்கங்கள்
ஆனால், இரண்டு ஆண்டுகளில் ஊக்கத்தொகைக்காக தமிழக அரசின் சார்பில் எந்த நிதியும் வழங்கப்படவில்லை. மாறாக, லாபத்தில் இயங்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்த உபரி நிதியை எடுத்து தான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதனால் இப்போது அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களும் நலிந்து விட்டதால் அந்த வகையிலும் பணத்தை திருப்பி விட முடியவில்லை.
திமுக அரசால் ஆவினுக்கு இழப்பு
குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் கூட்டுறவு அமைப்புகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனமும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் தான் இயங்கி வந்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைந்ததால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.550 கோடி இழப்பு ஏற்பட்டது.
ஆட்சியாளர்களின் சுரண்டல்கள்
அதை திமுக அரசு வழங்காததால் தான் ஆவின் நிறுவனம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. திமுக ஆட்சியில் 5 முறை பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டாலும் கூட ஆவின் நிறுவனத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை. அதற்கு காரணம் ஆட்சியாளர்களின் சுரண்டல்கள் தான்.
உழவர்களை ஏமாற்றுவதே வேலை
ஆவின் நிறுவனத்தால் இப்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையே போதுமானது அல்ல. அதிலும் ஊக்கத்தொகையை வழங்காமல் ஏமாற்றுவது நியாயமல்ல. உழவர்களை ஏமாற்றுவதையே திமுக அரசு கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
உழவர் பெருமக்கள் உழவர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
==================