

பொங்கல் பண்டிகை - ஆம்னி பேருந்துகள்
Anbumani About Omni Bus Fare in Pongal Festival 2026 : பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஆம்னி பேருந்துகள் மூலம் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
வேடிக்கை பார்க்கும் அரசு
பொங்கலை ஒட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டணக் கொள்ளையைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு
இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “பொங்கல் திருநாளைக் கொண்டாடச் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள லட்சக்கணக்கான மக்களைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது
”அரசின் விதிகளை மீறிப் பகிரங்கமாக நடைபெறும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்காமல், ஆளும் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
விண்ணை முட்டும் கட்டண உயர்வு
சென்னையிலிருந்து ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்குப் புறப்படும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரைக்கு: ₹4,000 வரை.
நெல்லைக்கு: ₹4,500 வரை.
கோவைக்கு: ₹3,800 வரை.
இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு தளங்களில் பகிரங்கமாக வெளியிடப்பட்டு முன்பதிவுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
கட்டணக் கொள்ளை - வேடிக்கை பார்ப்பதா?
ஊடகங்களில் இது குறித்துச் செய்திகள் வெளியான பின்னரும், கட்டணக் கொள்ளையைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை தமிழக அரசுக்கு ஆணையிட்டது.
வேடிக்கை பார்க்கும் திமுக அரசு
ஒவ்வொரு முறையும் பா.ம.க. இந்தக் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தும் போதும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் வெறும் பேச்சுவார்த்தை நடத்தி ₹100 அல்லது ₹200 குறைப்பதாகவும், அல்லது ₹2,000 அபராதம் விதிப்பதாகவும் கூறி, திமுக அரசு கண்துடைப்பு நாடகங்களை மட்டுமே நடத்துகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு ஏவல்
ஒரு மக்கள்நல அரசின் கடமை மக்களின் பக்கம் நிற்பதுதான். சட்ட விரோதமாகக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவற்றின் கட்டணங்களைக் குறைக்கச் செய்திருக்க வேண்டும்.
மக்களை சுரண்டுவதை வேடிக்கை பார்க்கிறது
ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறைகூட திமுக அரசு அவ்வாறு செய்யவில்லை. மாறாக, கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்களின் பக்கம் நின்று, அவை மக்களைச் சுரண்டுவதற்குத் துணை போவதையே வாடிக்கையாக வைத்துள்ளது.
முதலாளிகளுக்கு ஏவல் செய்வதே வாடிக்கை
திமுக ஆட்சியாளர்கள் மக்களுக்குச் சேவை செய்வதை விடுத்து, தனியார் முதலாளிகளுக்கு ஏவல் செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கத் தவறியதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது”
பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார்.
====