

பலத்த மழை - பயிர்கள் சேதம்
Anbumani Ramadoss on Paddy Crop Compensation Tamil Nadu : இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.
விவசாயிகளை ஏமாற்ற முயற்சியா?
பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து அரசு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், விவசாயிகளை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன.
35 நாட்கள் கடந்தும் இழப்பீடு இல்லை
அதன்பின் 35 நாள்களாகியும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களில் விளைச்சல் பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது.
சம்பா மற்றும் தாளடி பயிர்களை ஒரு லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் மறு நடவு செய்ய நேரிட்டது. அதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதை ஈடு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அந்த கடமையை செய்ய திமுக அரசு தவறுகிறது.
பொய் சொல்லி தப்பிக்க முடியாது
பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது.
மழை பாதிப்புகளை கணக்கிட 35 நாள்கள் என்பது மிக அதிக காலம் ஆகும். தமிழக அரசிடம் உள்ள தொழில்நுட்பம், மனிதவளம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இக்கணக்கெடுப்பை எப்போதோ நடத்தி முடித்திருக்க முடியும்.
அரசுக்கு அக்கறையில்லை
ஆனால், பயிர்களுக்கான இழப்பீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் பின்னணியில் விவசாயிகளுக்கு எதிரான சதி இருப்பதாகவே தோன்றுகிறது.
அக்டோபர் மாதம் பெய்த மழையில் இரு லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாய அமைப்புகள் கூறியுள்ளன.
விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம்
துறை அமைச்சரும், அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து, ஒரு கட்டத்தில் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற நாடகத்தை அரங்கேற்ற திமுக அரசு திட்டமிட்டிருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
விவசாயிகளுக்கு துரோகம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்ட திமுக அரசு, அவர்களை ஏமாற்ற எந்த எல்லைக்கும் செல்லக்கூடும்.
துரோக பட்டியல் மிக நீளமானது
நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு மிகக் குறைந்த கொள்முதல் நிலை நிர்ணயித்தது, கொள்முதலுக்காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகளை சரியான நேரத்தில் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என விவசாயிகளுக்கு திமுக அரசு செய்த துரோகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
================