இளைஞர்கள் சாபம் சும்மா விடாது : திமுக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

Anbumani Slams DMK : ஐந்தரை லட்சம் அரசு வேலைகள் என்று கூறி, 94 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கொடுத்த திமுக அரசை இளைஞர்களின் சாபம் சும்மா விடாது என்று அன்புமணி எச்சரித்து இருக்கிறார்.
Anbumani warned that curse of the youth will not leave the DMK government, which has promised 5.5 lakh government jobs but only given jobs to 94,000 people
Anbumani warned that curse of the youth will not leave the DMK government, which has promised 5.5 lakh government jobs but only given jobs to 94,000 peopleSource : Google
2 min read

5.5 லட்சம் பேருக்கு அரசு வேலை - வாக்குறுதி

Anbumani Slams DMK : பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ’’திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார்.

இளைஞர்களுக்கு துரோகம்

தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்றத் தவறியதும், வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்த துரோகத்தை ஒப்புக்கொள்வதும் கண்டிக்கத்தக்கவை.

17% பேருக்கு மட்டுமே வேலை

சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,‘‘திமுக ஆட்சியில் மொத்தம் 94,191 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்திருக்கிறார். இது திமுக உறுதியளித்த வேலைவாய்ப்புகளில் வேலைவாய்ப்புகளில் 17% மட்டுமே.

5.5 லட்சம் வேலை - எங்கே போனது?

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 3.50 லட்சம் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.

4 வகையான பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் (வாக்குறுதி எண்:188,189, 190,191)’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், வெறும் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வி மட்டுமல்ல... தமிழக இளைஞர்களுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகமும் ஆகும்.

காலி இடங்களை நிரப்பவில்லை

திமுக அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் தாண்டி, இயல்பாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்யவில்லை என்பது தான் பெரும் துரோகம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த காலியிடங்கள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படியானவையாகும்.

5 ஆண்டுகள் 2 லட்சம் பேர் ஓய்வு

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐந்தாண்டுகளில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கக் கூடும்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றாலும், புதிதாக ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களையாவது திமுக அரசு நிரப்பியிருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு செய்தது துரோகம் மட்டுமே

ஆனால், புதிதாக ஏற்பட்ட காலியிடங்களில் பாதி கூட நிரப்பப்படவில்லை என்பதிலிருந்தே திமுகவின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆர்க்டிக் துருவத்திற்கும், அண்டார்டிகா துருவத்திற்கும் இடையிலான தொலைவை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் திமுக செய்தது துரோகம், துரோகம், துரோகம் மட்டுமே.

சட்டம் இயற்றாதது ஏன்?

தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை 5 லட்சம் வேலைவாய்ப்புகளைக்கூட வழங்கவில்லை.

தனியார் வேலையிலும் துரோகம்

வழங்கப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் கூட தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை; மாறாக அவை பிற மாநில இளைஞர்களுக்குத் தான் தாரைவார்க்கப்பட்டன.

இதற்கு வசதியாகவே, தமிழக தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

1.30 கோடி இளைஞர்கள் தவிப்பு

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் கூடுதலான படித்த இளைஞர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற கவலையோ, அக்கறையோ திமுக அரசுக்கு இல்லை.

மனசாட்சி இல்லாத அரசு

தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்த அரசுகளிலேயே மனசாட்சியும், மனிதநேயமும் இல்லாத ஆட்சி என்றால் அது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான்.

மாணவர்கள், படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களை ஏமாற்றிய, துரோகம் செய்த திமுக அரசுக்கு எதிரான அவர்களின் சாபம் இந்த ஆட்சியை வீழ்த்தும்’’ என்று அன்புமணி எச்சரித்துள்ளார்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in