
துணை ஜனாதிபதி தேர்தல் :
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறார். தனது வேட்பு மனுவை சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தாக்கல் செய்தார். தமிழரான அவரை, தமிழக அரசியல் கட்சிகள் கட்சி பேதமின்றி ஆதரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி :
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ” மகாராஷ்டிரா ஆளுநர் சி,பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். உறுதியாக அவர், வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக இருந்து, அவரை வெற்றி பெறச் செய்து அந்த இருக்கைக்கு அனுப்ப வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள்.
இருவரும் நல்ல தலைவர்கள் தான் :
நம்மை பொறுத்த வரை முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நல்ல வேட்பாளர் தான். சி.பி. ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர் என்று ஜார்க்கண்ட், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கூட சொல்கின்றனர். மகாராஷ்டிராவில் இண்டி கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும் அவர் நல்ல மனிதர் என்று கூறுகின்றனர்.
திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் :
எனவே இண்டி கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு என்பதை மறு பரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலினுக்கு நேரம் இருக்கிறது. எனவே சாக்கு போக்கு சொல்லாமல் இதில் அரசியல் இல்லை என்று தெளிவுபடுத்துவதற்கு, ஒரு தமிழருக்கு நாம் எல்லோரும் சேர்ந்து துணை நின்றோம் என்ற ஒரு நல்ல விஷயத்தை மக்கள் மன்றத்தில் வைப்பதற்கு திமுகவுக்கு நல்ல வாய்ப்பாக இதை பார்க்கிறேன்.
தமிழகத்தின் முழு ஆதவும் தேவை :
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஒருமித்த ஆதரவு தமிழகத்தில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏகமனதாக எங்களிடம் இருக்கிறது.அவர் அனைத்து கட்சியினரிடம் அன்பும், நட்பும் பாராட்டிய நல்ல மனிதர். துணை ஜனாதிபதியாக அவர் வருவது ஆர்எஸ்எஸ்க்கும், தமிழருக்கும் பெருமை.
விஜய் மாநாடு வரவேற்பு :
விஜய் மாநாடு நடத்தட்டும். மாநாடு நடத்த எல்லாருக்கும் உரிமை உள்ளது. ஆக்ரோஷமாக போக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், போகட்டும். எல்லாரும் அரசியல் களத்தில் இருக்கிறோம். ஆகவே மக்கள் எங்கள் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் அதிகம் நம்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய்க்கும் வாழ்த்துகள், அவரது மாநாட்டுக்கும் வாழ்த்துகள்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
=================