

தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குப் பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
நுண் பார்வையாளர்கள் நியமனம்
தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக வாக்குச்சாவடிகள் தோறும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
75,064 வாக்குச் சாவடிகள்
75,064 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை ஒவ்வொன்றிலும், உறுதிசெய்யப்பட்ட அடிப்படை வசதிகளும், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள்
குறைந்தபட்ட வசதிகளில் குடிநீர், நிழலுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, போதுமான விளக்கு வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்குச் சரிவுடன் கூடிய சாய்வுப்பாதை...
தரமான வாக்குப்பதிவு அறை, முறையான வழிகாட்டிப் பலகைகள் ஆகியவை அடங்கும். வாக்காளர்கள் தங்கள் முறைக்காகக் காத்திருக்கும்போது அமர்வதற்காக, வரிசையில் சீரான இடைவெளியில் இருக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நான்கு சீரான, தரப்படுத்தப்பட்ட வாக்காளர் குறித்த சுவரொட்டிகள் முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அவற்றில் வாக்குச்சாவடி விவரங்கள், வேட்பாளர் பட்டியல், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களின் பட்டியல், வாக்களிக்கும் செயல்முறை ஆகியவை அடங்கியிருக்கும்.
வாக்காளர் உதவி மையங்கள்
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி எண், வரிசை எண் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் கண்டறிய உதவுவதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் /அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அங்கு இருக்கும்.
வாக்காளர் உதவி மையங்களில் தெளிவான அடையாளப் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது, வழிகாட்டி சுவரொட்டிகள் எளிதில் கண்ணுக்குத் தெரியும்படி அமைக்கப்பட்டு இருக்கும்.
கைப்பேசி வைக்க சிறப்பு ஏற்பாடு
வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள பல முயற்சிகளில் ஒன்றாக, வாக்குச்சாவடி நுழைவாயிலுக்கு வெளியே வாக்காளர்களுக்கான கைப்பேசி பாதுகாப்பு வசதி வழங்கப்படும்.
வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பு தங்களது கைபேசியை (அணைத்த நிலையில்), அதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலரிடம் ஒப்படைத்து, வாக்களித்த பிறகு அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
====