
Mudhalvar Marundhagam Medicines Shortage : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் நாடு முழுவதும் துவங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி “முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் திறந்தது திமுக அரசு.
75% தள்ளுபடியுடன் ஜெனிரிக் மருந்துகள் கிடைக்கும் என திமுக அரசு விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்வர் மருந்தகங்களில் தோல் நோய் சம்பந்தப்பட்ட மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
பிரதமரின் மக்கள் மருந்தகங்களில்(PM Makkal Marunthagam) சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஜெனிரிக் மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக விற்கப்படுகின்றன. ஆனால் முதல்வர் மருந்தகங்களில் வெறும் 300 வகை மருந்துகள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அதிலும் விற்பனையாகாத மருந்துகள் தான் அதிகளவில் உள்ளதாகவும் மக்கள் கூறுவது, திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மத்திய அரசுத் திட்டங்கள் மீது வேக வேகமாக திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதில் முனைப்புடன் செயலாற்றும் ஆளும் அரசு, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கோட்டை விட்டு விடுகிறது என்பதற்கான மற்றொரு சான்று தான் “முதல்வர் மருந்தகம்”.
மேலும் படிக்க : மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்: ஸ்டாலின்
எனவே, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 1000 மக்கள் மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் கிடைக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து, முதல்வர் மருந்தகங்களில் உள்ள செயல்பாட்டு சிக்கல்களைத் தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) கேட்டுக்கொண்டுள்ளார்.