

தமிழக சட்டமன்ற தேர்தல்
234 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தமிழகம். இங்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்த தேர்தல் ஆணையம், அதன்படி, ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்தது.
சட்டமன்ற தேர்தல் களம்
அதன்படி தேர்தல் அறிவிக்கை, வேட்பு மனு தாக்கல் தொடக்கம், வேட்பு மனு தாக்கல் நிறைவு. மனுக்கள் பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல், பரப்புரை என அடுத்தடுத்த நடவடிக்கைகள் நிறைவு பெற்று, பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டி இருக்கிறது.
நான்கு முனைப்போட்டி
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனைப்போட்டியை தமிழகம் எதிர்கொள்கிறது. டாக்டர் ராமதாஸ், சசிகலா கூட்டணி சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. புதிய தமிழகம் தனித்து போட்டியிடுகிறது.
தேசிய தலைவர்கள் பரப்புரை
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா, மல்லிகார்ஜுன கார்கே, சந்திரபாபு நாயுடு, டி.கே. சிவக்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் என தேசிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.
மாநில தலைவர்கள் பரப்புரை
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செல்வப்பெருந்தகை, திருமாவளவன், வைகோ, கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி,
நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அன்புமணி, டிடிவி தினகரன், நடிகர் விஜய், சீமான் உள்ளிட்டோரும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
மாலை ஓய்கிறது பிரசாரம்
தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
23ம் தேதி வாக்குப்பதிவு
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்ன. மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
* தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, ஒருங்கிணைக்கவோ, பங்கேற்கவோ கூடாது.
* தேர்தல் தொடர்பான திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லக் கூடாது.
* தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
==============