

பயிர்கள், நெல் மூட்டைகள் சேதம்
Paddy Moisture Central Team Visit Tamilnadu : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், சம்பா, தாளடி, பிசானப்பருவ நெல் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அறுவடை செய்யப்பட்ட கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, நெல்லும், மழையில் நனைந்துள்ளன. தமிழக அரசின் மெத்தன போக்கால், தாங்கள் பேரிழப்பை சந்தித்து இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள்
5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரில் அரசு கணக்கீடுகளின்படி 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல் அறுவடைப் பணிகள் அக்டோபர் இறுதிக்குள் முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட அதிக அளவாக நடப்பு ஆண்டில் இதுவரை 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்
இந்த சூழலில், அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். லாரிகள் போதிய அளவு இல்லாததால், நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால், மழைநீரில் நெல் மூட்டைகள் நனைந்து, நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன.
நெல்லுக்கான ஈரப்பதம் - மத்தியக் குழு
பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்த நெல்லும் அதிக அளவு ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டு இருக்கிறது.
தமிழகம் வரும் மத்தியக் குழு
இதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத் துறை அனுப்புகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் மற்றும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய இருப்பு மேலாண்மை மற்றும் ஆய்வு நிறுவன துணை இயக்குநர் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர்.
நெல் மாதிரிகளை சேகரிக்க உத்தரவு
தற்போதைய நிலையை அறிய, இந்திய உணவுக்கழகம் மற்றும் தமிழக அதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க வேண்டும். இதற்காக, உணவுத் துறையின் இருப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்தலைமையில் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்களுடன் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் உடனடியாக தமிழகம் சென்று பணிகளை தொடங்க வேண்டும். ஆய்வுக்கு பிறகு, 3 குழுக்களும் இணைந்து ஆய்வு முடிவுகளை அறிக்கையாக தயாரித்து, மத்திய உணவுத் துறைக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், நெல்லுக்கான ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து மத்திய அரசு முடிவு எடுத்து அறிவிக்கும்.
===