

ராமதாஸ் vs அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி, கட்சி இரண்டாக பிளந்து கிடக்கிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் அன்புமணி தரப்பு, 18 இடங்களை வாங்கி தேர்தலில் போட்டியிடுகிறது.
மாம்பழம் சின்னம்
தேர்தல் ஆணைய பதிவேட்டின்படி, பாமகவும், அதன் சின்னமான மாம்பழமும் அன்புமணி தரப்பிற்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ராமதாஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
நீதிமன்றத்தை நாடிய ராமதாஸ்
இந்தநிலையில், கட்சியும், சின்னமும் கைவிட்டு போனதால், கொந்தளிப்பில் இருக்கும் ராமதாஸ், மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை முதலில் நாடினார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமதாஸ் தரப்புக்கு சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.
மூன்று நாட்கள் கெடு
மேலும், தாக்கல் செய்யப்படும் மனுவை மூன்று நாட்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) முறையீடு செய்யப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை இன்று (புதன்கிழமை ) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பதிலளிக்க நாளை வரை அவகாசம்
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து நாளைக்குள் அன்புமணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
மாம்பழம் யாருக்கு?
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாளைக்கும் முடிவு எடுக்க வேண்டும் என்பதால், பாமகவின் மாம்பழம் சின்னம் அன்புமணி தரப்பிற்கு கிடைக்குமா அல்லது தேர்தல் வரை முடக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
===============