

அரசு ஊழியர்கள் தொடர் கோரிக்கை
CM Stalin announces Tamil Nadu Assured Pension Scheme for govt. employees : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.
அரசு ஊழியர்கள் போராட்டம்
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அதை செயல்படுத்தவில்லை. நான்கரை ஆண்டுக்கும் மேலான நிலையிலும், அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த ஜனவரி 6முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அவர்கள் அறிவித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டம்
இதன் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அம்சங்கள் புதிய திட்டத்தில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் அம்சங்கள் :
1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
2. 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.
3. 2.50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு
4. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியம்.
5. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை
6 புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்
7. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழகம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம்
13 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
புதிய ஓய்வூதிய திட்டத்தால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழக அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் தமிழக அரசு ஆண்டுதோறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்
ஜாக்டோ ஜியோ வரவேற்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த உடன், முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் சந்தித்து இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்துகொண்டனர்.
வேலைநிறுத்தம் ரத்து
ஓய்வூதிய திட்டத்தை வரவேற்பதாக அவர்கள் கூறினர். ஜனவரி 6ம் தேதி அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ரத்து செய்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
====