

ஓய்வூதிய திட்டம்
EPS Criticized CM MK Stalin on TAPS Pension Scheme in Tamil Nadu : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஓய்வு திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.
50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்டங்களை முடக்கியதே திமுகவின் சாதனை
இந்தநிலையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ அதிமுக ஆட்சியில், மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான், திமுகவின் சாதனை.
ஒரு குடும்பம் நன்மைபெற ஆட்சி
ஒரு குடும்பம் நன்மை பெறவே, திமுக ஆட்சி நடக்கிறது. நான்கே முக்கால் ஆண்டு துாங்கிவிட்டு, இப்போதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு ஞானோதயம் பிறந்து, புதுப்புது திட்டங்களை அறிவிக்கிறார்.
பணம் சுருட்டுவதே குறிக்கோள்
சுய உதவி குழுக்கள் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய, 44 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கின்றனர். பணத்தை சுருட்டவே, ஆய்வு என்ற போர்வையில் நிதி ஒதுக்கியுள்ளனர்.
வலுவான கூட்டணி அமையும்
அதிமுகவுக்கு கூட்டணி அமையவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்.
புதிய ஓய்வூதிய திட்டம்
திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றனர். இப்போது புதிய திட்டத்தை முத்லவர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார். அரசு ஊழியர்கள் கேட்டது பழைய ஓய்வூதிய திட்டம்.
பெயரை மாற்றி ஏமாற்றுவதா?
ஆனால், ஸ்டாலின் குறிப்பிடுவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம். பெயரை மாற்றி ஏமாற்றுகிறார். 6ம் தேதி அரசு ஊழியர்கள் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தத்தை நிறுத்த, தந்திரமாக உத்தரவு வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். அரசாணை வெளியிடுகிறபோதுதான், அரசு ஊழியர்கள், திமுக அரசைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்
=================