

எரிவாயு ஆலை வெடிவிபத்து
கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில் துறை பகுதியில் உள்ள ‘பர்சான்' எரிவாயு விநியோக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
மூன்று தமிழர்கள் பலி
இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 13 பணியாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 66 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களில் மூன்று பேர் தமிழர்கள் ஆவர்.
இது தொழிற்சாலை விபத்து மட்டுமே. சதிவேலையோ அல்லது தாக்குதலோ இல்லை, என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய் இரங்கல்
இந்தநிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டு இருக்கும் செய்தியில், “கத்தாரில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த பபித்,
பணகுடி பகுதி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார்
அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த சுவின் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
உடல்களை கொண்டு வர ஏற்பாடு
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு...
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
தொலைபேசி எண்கள் அறிவிப்பு
இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசின் உதவி எண்கள், இந்தியாவிற்குள் +91 1800 309 3793, வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901”, இவ்வாறு முதல்வர் விஜய் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
================