

ஆசிரியர் தின கொண்டாட்டம்
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிறப்பான பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது
அந்த வகையில், தேசிய நல்லாசிரியர் விருது, தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகிய இருவருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட இருக்கிறது.
முதல்வர் விஜய் வாழ்த்து
இரண்டு பேருக்கும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். "ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்! நல்வாழ்த்துகள்!" என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
==========