

ராகுல் காந்தியை பிரதமராக்க முதலமைச்சர் விஜய் தீவிர பிரச்சாரம் செய்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அஞ்சலி
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி ஆட்சி மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகள் குறித்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், "முதல்வர் விஜய், தவெகவினர், காங்கிரசார் என அனைவரும் தெளிவாக இருக்கிறோம்.
தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். அதனை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். அதற்கான காலம் வரும்போது அனைவரும் வெளிப்படையாக அறிவிப்பார்கள்" எனக் கூறினார்.
2029 தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெற வியூகம்
மேலும் பேசுகையில், "தேசிய அளவில் இந்தியா கூட்டணியாகவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியாகவும் செயல்படுவோம் என்றார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் இக்கூட்டணியின் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வராக விஜயே தொடர வேண்டும். 2029 தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றிபெறும். ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் முதல்வர் விஜய் தீவிர பிரச்சாரம் செய்வார்" எனத் தெரிவித்தார்.
2029 பிரதமர் வேட்பாளர் யார்?
அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சை சில வாரங்களாகவே பூதாகரமாக வெடித்தது..
சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது, அமைச்சர்கள் ஜெகதீஷ்வரி, வினோத், சரத்குமார் மற்றும் கனிமொழி எம்.எல்.ஏ. ஆகியோர் முதல்வர் விஜய் அடுத்து பிரதமர் என்ற நிலைக்கு கூட வரலாம் என்ற விதத்தில் பேசி இருந்தது கூட்டணி கட்சியினரிடையே பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
=====