

திமுக vs காங்கிரஸ்
Congress MP Manickam Thakur responded to DMK : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை மெல்ல மெல்ல எழுப்பி வருகிறது. அந்தக்கட்சி தவெக பக்கம் செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி இருந்தால் தான் வெற்றி
இந்தநிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.
அதிகார பகிர்வும் அவசியம்
அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வு அவசியம், இதுகுறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என IDPS நிறுவனத்தின் சர்வே முடிவுகளை முன்வைத்து பதிவிட்டிருந்தார்.
ஆர்எஸ்எஸ் குரலாய்...
இதற்கு எதிர்வினை ஆற்றிய திமுகவின் முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா, “ சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர்.
இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவன்போன்ற கூட்டணித் தலைவர்கள் “ஓரணியில் நின்று ஆர் எஸ் எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்” என்பதனை தெளிவுபடுத்தினர்.
ஆர்எஸ்எஸ் குரலில் மாணிக்கம் தாகூர்
இந்தநிலையில், மாணிக்கம் தாகூர் அவர்கள் “இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது” மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குலைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய “முடிந்து போன” குரலை மாணிக்கம் தாகூர் அவர்கள் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
நான் காங்கிரஸ்காரன் - மாணிக்கம் தாகூர்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாணிக்கம் தாகூர், “சகோதரர் அப்துல்லா அவர்களுக்கு … நான் காங்கிரஸ் காரன். நேற்று ..இன்று ..நாளை என சங்கிகளை எதிர்த்து பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் என் தலைவர் அவர்களின் தலைமையில் அஞ்சாமல் குரல் கொடுப்பது என் கடமை.
காங்கிரஸ் நிலைப்பாடு இது தான்
காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவேன். இது எங்கள் இயக்கத்தின் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறிய கருத்து. இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை” எனக் குறிப்பிட்டு டிசம்பர் 22ம் தேதி ANI செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியையும் மாணிக்கம் தாகூர் பகிர்ந்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் தலைவர்களிடையே உருவாகி இருக்கும் வார்த்தை போர், எங்கு போய் முடியும்? யார் முடிவு கட்டுவார்கள்? காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
====================