

We only ask for the places where you have failed: Manickam Thakur slams DMK:
சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் - திமுக இடையே ஒரே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் திமுக உடனான கூட்டணியின் போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த 60 நாட்களாக காத்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.
ஆட்சியில் பங்கு ஒத்துவராது:
இந்த நிலையில் தான் இந்தியா டுடே கருத்தரங்கின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது, அது அவர்களுக்கும் தெரியும் என்று காங்கிரஸை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஆட்சியில் பங்கு கேட்க முடியாத காங்கிரஸ்
இதற்கு பிறகு திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கக்கூடாது என்பது போன்ற நோக்கத்தில் முதல்வர் பேசியதாக சொல்லப்படும் நிலையில், முதல்வரின் பேச்சைக் கேட்டு கொதித்தெழுந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மாணிக்கம் தாகூர் எக்ஸ் பதிவு
”மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006 -ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தவறு என்று திமுகவை விமர்சிக்கும் வகையில் எக்ஸ் பதிவை வெளியிட்டிருந்தார்.
2006 நடந்தது என்ன ?
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 96 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக ஆட்சி அமைக்க 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவளித்தது.
5 ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவை தந்த காங்கிரஸ், திமுக சுமூகமாக ஆட்சி நடத்த உதவியாக இருந்தது. இதை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தார்.
முதல்வரின் சொந்த கருத்து
மாணிக்கம் தாகூரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மேலிட காங்கிரசின் முடிவே இறுதியானது என்றும், ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்பது முதல்வரின் சொந்த கருத்து என்றும், அதை ராகுல் காந்தியும் முதல்வரும் சேர்ந்து தான் பேச வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்?
பிற மாநிலங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள ஒப்புகொள்ளும் போது தமிழகம் மட்டும் தயங்குவது ஏன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி கேள்வியெழுப்பி இருந்தார்
மேலும் தமிழக மக்களுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது பிரச்சனை இல்லை என்று முதல்வரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மீண்டும் மீண்டும் திமுகவை சீண்டும் மாணிக்கம் தாகூர்
இதைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூர், தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என்று பதிவிட்டிருந்தார். தற்போது மீண்டும் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதில் அவர், ”2021 யில் 173 யில் போட்டியிட்டு 133 வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிவு?
பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்குப் பிறகு, மாணிக்கம் தாகூரின் எக்ஸ் பதிவுகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறது.
ராகுல் காந்தியின் மறைமுக பதில்?
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிலைப் போன்று மாணிக்கம் தாகூரின் பதிலும், ராகுல் காந்தியின் மறைமுக பதிலாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
திமுக கூட்டணிக்கு குட்பை?
மேலும், இதன் மூலம் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் முறிவு ஏற்பட்டு காங்கிரஸ் வெளியேறலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
உறுதியாக நிற்கும் காங்கிரஸ் தலைவர்கள்
மாணிக்கம் தாகூர், பிரவின் சக்ரவர்த்தி போன்றோர் ஆணித்தரமாக தங்கள் விமர்சனங்களை மு்ன்வைத்து வந்தாலும், காங்கிரஸ் தலைமை மவுனம் காப்பது திமுகவின் கோபத்தை அதிகரித்து உள்ளது.
22ம் தேதிக்கு பிறகு முடிவு
22ம் தேதிக்கு நடைபெறும் தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையின் போது பிரசினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படு்மா? அல்லது கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா? என்பது தெரிந்து விடும்.
=====