

பிரதமர் வேட்பாளர் விவாதமும் சர்ச்சையும்
2029 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று இந்தியா டுடே மற்றும் சி - வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு மற்றும் தவெகவின் சமூக வலைத்தள மீம்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.
அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரிக்கை
இந்த நிலையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தியே அடுத்த பிரதமராக வருவார்.
ஒருவேளை, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகத் தவெக ஏற்றுக்கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் தவெக அரசில் அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டார்கள்" எனத் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
அமைதி காக்கும் தவெக தலைமை?
அமைச்சர் ராஜேஷ் குமாரின் இந்த எச்சரிக்கை மற்றும் சமூக ஊடகச் செய்திகள் குறித்து தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யோ அல்லது கட்சியின் மூத்த நிர்வாகிகளோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.
தலைமைச் செயலக சந்திப்பு
இத்தகைய அரசியல் பரபரப்புக்கு மத்தியில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைக் காங்கிரஸ் மாநில கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அவருடன் சேர்ந்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீண் சக்கரவர்த்தியும் முதல்வரை சந்தித்துள்ளார்.
அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சை, கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்ற விவாதம் ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் முதல்வர் விஜய்யுடனான காங்கிரசாரின் சுமூகமான இந்த சந்திப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : "இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்ய வேண்டாம்" : தாரகை காத்பர்ட் இருக்கை மாற்றம், மாணிக்கம் தாகூர் விளக்கம்!
======