

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை
அதன்படி, சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுப் படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் காலியான பின்னணி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய இருவரும் தமது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தனர்.
2 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதர 5 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காலியாக உள்ள இந்த 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளின் கள நிலவரம்
முந்தைய தேர்தலில் கடுமையான போட்டிகளுக்கு இடையே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், மீண்டும் அவற்றை தக்கவைத்துக் கொள்ளும் தீவிர முனைப்பில் அதிமுக உள்ளது.
உருவெடுக்கும் முக்கோணப் போட்டி
தவெக சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேவேளையில், திமுகவும் இந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு முக்கோணப் போட்டி உருவெடுத்துள்ளது.
இடைத்தேர்தல் கால அட்டவணை
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 16 வரை நடைபெறுகிறது. மனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 17 ஆம் தேதி, மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பர் 19 கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்
அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
=====