

DMK Congress Alliance Issue : சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என இப்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆட்சி, அதிகாரத்தை கோரும் தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் திமுக உடனான் கூட்டணியின் போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த 36 நாட்களாக காத்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.
திமுக - காங்கிரஸ் இடையே சலசலப்பு
இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் 22 ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திமுக தரப்பு அறிவித்தது.
இதன் காரணமாக திமுக-காங்கிரஸ் இடையே சலசலப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
முதல்வரின் பேச்சு
இதை உறுதி படுத்தும் விதமாக இந்தியா டுடே கருத்தரங்களில் பேசிய முதல்வரின் பேச்சும் அமைந்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தமிழகத்திற்கு பொருந்தாது, காங்கிரசிற்கும் இது தெரியும் என்று முதல்வர் பேசியிருந்தார்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
இதைத்தொடர்ந்து முதல்வரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ”மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006யில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தவறு” என்று பதிவிட்டிருந்தார்.
2006 நடந்தது என்ன ?
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 96 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக ஆட்சி அமைக்க 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவளித்தது.
5 ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவை தந்த காங்கிரஸ், திமுக சுமூகமாக ஆட்சி நடத்த உதவியாக இருந்தது. இதை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தார்.
செல்வப்பெருந்தகை விளக்கம்
மாணிக்கம் தாகூரை அடுத்து முதல்வரின் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஒத்துவராது என முதல்வர் பேசியது அவரது சொந்த கருத்து.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்ய முடியும். தலைமை எடுக்கும் முடிவே எங்களின் முடிவு என்று கூறினார்.
பிரவீன் சக்கரவர்த்தி அதிரடி
பிற மாநிலங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள ஒப்புகொள்ளும் போது தமிழகம் மட்டும் தயங்குவது ஏன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் தமிழக மக்களுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது பிரச்சனை இல்லை என்று முதல்வரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் மறைமுக பதில்
முதல்வரின் பேச்சுக்கு ராகுல் காந்தியின் வலது கரமாகவே கருதப்படும் பிரவீன் காந்தியின் இந்த பதில் , காங்கிரஸ் மேலிடத்தின் மறைமுக பதிலாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எப்படி சதியாகும்?
முதல்வரின் பேச்சைத் தொடர்ந்து தற்போது மாணிக்கம் தாகூர் மற்றுமொரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என்று யோசிப்பது போன்ற எமோஜியுடன் பதவிட்டுள்ளார்.
மவுனம் காக்கும் ராகுல்
முதல்வரின் பேச்சு வெடித்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் பதிலும் தற்போது பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி இது தொடர்பாக என்ன பேசப்போகிறார் என்றும் கட்சியினர் ஆவலாக உள்ளனர்.