

அனல் பறக்கும் தேர்தல் களம்
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என நான்கு முனைப்போட்டி ஏற்கனவே உறுதியாகி விட்டது.
விஜயின் வருகை திமுக, அதிமுகவின் வாக்கு வங்கியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்பது, தேர்தல் முடிவுகளின் போது தான் தெரிய வரும்.
சசிகலா
இந்தநிலையில், சசிகலாவும், ராமதாசும் அமைந்து புதிய கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள். அதிமுகவில் மீண்டும் இணைய முடியாத நிலைக்கு சசிகலா தள்ளப்பட்டார். அதிமுகவை ஒருங்கிணைக்க அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இதையடுத்து "அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" (AIPTMMK) என்ற கட்சியை தொடங்கிய சசிகலா, கொடியையும், சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.
ராமதாஸ்
இதேபோன்று, தனக்கு எதிராக செயல்படும் தனது மகனும், பாமக தலைவருமான அன்புமணியை வழிக்கு கொண்டு வர ராமதாஸ் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியை தழுவின.
கடைசியாக கட்சியின் பெயர், சின்னத்தை மீட்க நீதிமன்றத்தின் படிகளை ஏறிய ராமதாசுக்கு தோல்வியே கிடைத்தது.
ராமதாஸ் - சசிகலா
இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில், பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா ஆகிய இருவரும் கைகோர்த்து கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.
தைலாபுரத்தில் அதிரடி
சில நாட்களாகவே தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் சசிகலா இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இதன் தொடர்ச்சியாக இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில், சசிகலாவின் "அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" (AIPTMMK) மற்றும் ராமதாஸின் பாமக ஆகிய கட்சிகள் ஓரணியில் நின்று போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
இவர்கள் கூட்டணி திமுக மற்றும் அதிமுகவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதற்கான காரணங்களை பார்ப்போம்...
* வட மாவட்டங்களில் வலுவாக உள்ள வன்னியர் வாக்குகளும், தென் மாவட்டங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளும் இணைவது ஒரு மிகப்பெரிய 'வாக்கு வங்கி' ஏற்படுத்தும்.
* இது திமுக, அதிமுக, அன்புமணி பாமகவிற்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
* சில ஆயிரம் வாக்குகளே வெற்றியே தீர்மானிக்கும் என்பதால், இருவரும் ஏற்படுத்த இருக்கும் சேதம் யாரை வேண்டுமானாலும் தேர்தலில் வீழ்த்தலாம்.
* குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வின் வாக்கு வங்கியைச் சிதைப்பதே இந்தக் கூட்டணியின் மறைமுகத் திட்டம் எனக் கூறப்படுகிறது.
* 234 தொகுதிகளிலும் போட்டியிட ராமதாசும், சசிகலாவும் முடிவு செய்துள்ளனர்.
தர்மயுத்தம் - சசிகலா கருத்து
"தமிழகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரவும், திராவிட அரசியலின் பிடியில் இருந்து மக்களை மீட்கவும் இந்தத் தர்ம யுத்தம் தொடங்கியுள்ளது" என்று ஆணித்தரமாக கூறுகிறார் சசிகலா.
அதிகார மையங்களை மாற்றுவோம் - ராமதாஸ்
கூட்டணி என்பது வெறும் தேர்தல் கணக்கு மட்டுமல்ல, இது தமிழக அரசியலில் பல ஆண்டுகாலமாகத் தொடரும் அதிகார மையங்களை மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாகும் என்று ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.
இவர்களின் இந்தக் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
=============