

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியம்
ED on TN Govt Recruitment Scam : அமைச்சர் K.N. நேரு வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரிய பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்று இருப்பதாக, தமிழக காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருக்கிறது. சுமார் 888 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், ஒரு பதவிக்கு 25 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பணி நியமனத்தில் மாபெரும் ஊழல்
இந்த ஊழல் பற்றி அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவல் என்னவென்றால், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு(MAWS Department) இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நகரமைப்பு திட்டமிடல் அதிகாரிகள் உட்பட, 2,538 பேரை தேர்வு செய்ததில் இந்த ஊழல் நடந்துள்ளது.
ரூ. 25 - 30 லட்சம் வரை லஞ்சம்
பதவிக்கு ஏற்ப, 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இதுதொடர்பாக, அமைச்சர் KN நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருக்கிறது.
வழக்கு பதிய டிஜிபிக்கு கடிதம்
பணி நியமன ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்து, அதன் நகலை எங்களுக்கு அனுப்புங்கள். அப்போது தான் எங்களால் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய முடியும்' என, தமிழக காவல் துறையின் பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, கடந்த 27ம் தேதி கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக, 232 பக்க ஆவணங்களை அமலாக்கத்துறை இணைத்துள்ளது.
அமைச்சரின் தம்பிகளுக்கு தொடர்பு
பணி நியமன ஊழலில், அமைச்சர் நேருவின் தம்பிகள் ரவிச்சந்திரன்(Minister KN Nehru Brother Ravichandran), மணிவண்ணன் மற்றும் இவர்களின் உதவியாளர்கள் ரமேஷ், செல்வமணி மற்றும் கவி பிரசாத் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.
பணி நியமனம் தொடர்பாக, இவர்களைத்தான் பலரும் அணுகி உள்ளனர். எங்களிடம் சிக்கிய ஆவணங்களில், 150 விண்ணப்பதாரர்கள், ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் வாயிலாக, முறைகேடாக பணி நியமனம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
மதிப்பெண்ணில் குளறுபடி - முறைகேடு
தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பே, ரவிச்சந்திரன் மற்றும் மணிவண்ணனின் உதவியாளர்களின், 'வாட்ஸாப்'பில் இருந்து தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மதிப்பெண்ணில் குளறுபடி செய்து தேர்ச்சி பெற வைத்த தகவலும் அதில் இடம்பெற்று உள்ளது. ரவிச்சந்திரன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியல் ஒன்றில், விண்ணப்பதாரர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன. அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் சில குறியீடுகளும் எழுதி வைக்கப்பட்டு இருந்தன.
பணம் கொடுத்தவர்களுக்கு பணி உறுதி செய்யப்பட்ட தகவல், அவர்கள் நன்றி தெரிவித்து அனுப்பிய குறுந்தகவல்களும் ரவிச்சந்திரன் உதவியாளர் செல்வமணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
10 ரூபாய் நோட்டு :
ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் இவர்களின் உதவியாளர்கள் தங்களை அணுகிய விண்ணப்பதாரர்களிடம் முன்கூட்டியே, 10 ரூபாய் நோட்டில் உள்ள எண்களை, அவர்களிடம் தெரிவித்துள்ளனர். நாங்கள் அனுப்பி வைக்கும் நபர்களின், 'வாட்ஸாப்' செயலியில், இந்த, 10 ரூபாய் படம் இருக்கும். அதை அவர் காண்பித்தால், எண்களை சரிபார்த்து, அவர் தெரிவிக்கும் நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : ”எங்கும் ஊழல் எதிலும் ஊழல்” : ED புகார் மீது FIR தேவை : எடப்பாடி
10 ரூபாயை வைத்து ஊழல்
மொத்த ஊழலும், அந்த, 10 ரூபாய் நோட்டை மையமாக வைத்தே நடந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டின் படத்தையும், அது தொடர்பாக நடந்த குறுஞ்செய்தி தகவல்களையும் திரட்டி உள்ளோம். இதுபற்றி, தமிழக காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்” இவ்வாறு அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
======