

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் இழுபறிக்கு இடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் 'எக்ஸ்' பதிவு
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், இவரின் இந்த வாழ்த்துச் செய்தி ஒரு முக்கிய அரசியல் சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.
மெஜாரிட்டியை நோக்கி தவெக
தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆரம்பகட்ட ஆதரவு: காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்தது.
இடதுசாரிகளின் நிலைப்பாடு
நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின.
116 நெருங்கிய தவெக
இதற்கான கடிதத்தைச் சென்னை தியாகராய நகரில் தவெக நிர்வாகி சிடிஆர். நிர்மல்குமாரிடம் அக்கட்சித் தலைவர்கள் வழங்கினர். இதன் மூலம் தவெகவின் பலம் 116-ஐ எட்டியுள்ளது.
திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவு என்ன?
ஆட்சி அமைக்க இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
விசிக தனது இறுதி முடிவை இன்று மாலை அறிவிக்க உள்ள நிலையில், அதன் பிறகு தவெகவுக்குத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநரிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு?
முன்னதாக, தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்த நிலையில், பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட பிறகே ஆட்சி அமைக்க ஆளுநரிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் ஒவ்வொரு மணிநேரமும் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.