

போட்டிப்போட்டு தேர்தல் வாக்குறுதி
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளில் திமுகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் 78 கிலோ எடைகொண்ட கேக்கை வெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அவர் வழங்கினார்.
அதிமுக 3 கட்ட தேர்தல் வாக்குறுதி
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே அதிமுக சார்பில் 2 முறை தேர்தல் அறிவிப்புகள் வெளியிட்டுள்ள நிலையில், 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
மக்கள் சுமை அதிகரித்து விட்டது
ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்து விட்டது.
10,000 ரூபாய் கருணைத் தொகை
எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.
பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000
இரண்டாவது வாக்குறுதியாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
மீனவர்கள் நிவாரணத் தொகை ரூ.12,000
மூன்றாவது வாக்குறுதியாக மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000/- ரூபாயில் இருந்து 12,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பொங்கலுக்கு ரூ.1,000
நான்காவது வாக்குறுதியாக ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கைத்தறி நெசவாளர்கள் - இலவச மின்சாரம் 450 யூனிட்
ஐந்தாவது வாக்குறுதியாக கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்...
விசைத்தறி நெசவாளர்கள் - இலவச மின்சாரம் 1,400 யூனிட்
விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நடைபாதை வியாபாரிகள் - கூட்டுறவு கடன் தள்ளுபடி
ஆறாவது வாக்குறுதியாக நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
======================