

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
பாதுகாப்பு பணி, 83,000 போலீசார்
மொத்தம் 75,064 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்த வாக்குப் பதிவுக்காக சுமார் 83,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் பலமுனைப் போட்டி
ஆளும் திமுக கூட்டணி, எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி, புதிதாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், மற்றும் நாம் தமிழர் கட்சி எனப் பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி யாருக்கு என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம்
1952ஆம் ஆண்டு தேர்தலின் போது, சுமார் 1.99 கோடிக்கும் குறைவாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டு நிலவரப்படி 6.28 கோடியாகப் பல மடங்கு உயர்ந்தது.
இது மாநிலத்தின் மக்கள் தொகை பெருக்கம் மட்டுமன்றி, 1989ம் ஆண்டு வாக்குரிமைக்கான வயது 21ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது முக்கிய காரணமாகும்.
புதிய தலைமுறையினர் ஜனநாயகச் செயல்பாடுகளில் ஈடுபடக் கிடைத்த வாய்ப்பும் வாக்கு சதவீதம் அதிகரிக்க முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
வாக்கு சதவீதம் - ஏற்ற இறக்கங்கள்
1962 வரை அரசியல் விழிப்புணர்வு குறைவால் வாக்குப்பதிவு என்பது சுமார் 50 சதவீதம் ஒட்டியே இருந்தது.
* 1952- 56.41%
* 1957- 46.84%
பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் தீவிர அரசியல் 1967 முதல் 1984 வரையிலான காலங்களில் வாக்குப்பதிவை 70% முதல் 76% வரை நிலைபெறச் செய்தது.
ஆனால், சில அரசியல் நிகழ்வுகளால், 1991ல் 63.92% ஆகவும், 2001ல் 59.07% ஆகவும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது.
2011 - 78% வாக்குப்பதிவு
2011ம் ஆண்டு தேர்தலில் பதிவான 78.12% வாக்குகள், தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான சதவீதம் ஆகும்.
வாக்களிக்க மகளிர் ஆர்வம்
20 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருவது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மகளிர் உரிமைத் தொகை போன்ற சிறப்பு திட்டங்கள், பெண் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அதிக அளவில் ஈர்க்கும் காரணிகளாக இருக்கின்றன.
நோட்டாவுக்கும் வாக்கு
2014ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ‘நோட்டா’ (NOTA) விருப்பம், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் சுமார் 1% முதல் 1.3% வாக்காளர்களை ஈர்த்து வருகிறது.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று நினைப்பவர்களும், தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட இது உதவியாக இருக்கிறது.
தமிழகத்தின் தனிச்சிறப்பு
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சராசரியாக 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாவது ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான ஜனநாயகத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
இதற்கு வாக்காளர்களின் தீவிரப் பங்கேற்பு, தமிழக அரசியலின் தனிச்சிறப்பாகவே இன்றுவரை நீடிக்கிறது.
1952-ம் ஆண்டு முதல் இதுவரை பதிவான வாக்குகள் சதவீதத்தை பார்க்கலாம் :
1952 1,99,58,669 56.41%
1957 1,75,14,993 46.84%
1962 1,86,10,721 70.65%
1967 1,91,90,992 76.57%
1971 2,30,64,385 71.82%
1977 2,71,80,873 61.58%
1980 2,81,73,498 70.74%
1984 3,09,45,103 73.47%
1989 3,98,50,386 69.69%
1991 3,99,09,767 63.92%
1996 4,24,84,653 66.95%
2001 4,74,94,423 59.07%
2006 4,66,02,575 70.82%
2011 4,71,16,217 78.12%
2016 5,81,95,728 74.81%
2021 6,29,35,736 72.81%
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு, 2025ல் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்தது.
SIR பணிகளுக்கு பின் இறுதி வாக்காளர் பட்டியலில் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
* மொத்தம்: 5,67,07,380
* ஆண்கள்: 2,77,38,925
* பெண்கள்: 2,89,60,838
* 3-ம் பாலினத்தவர்: 7,617
* முதல் முறை வாக்காளர்கள்: 12.51 லட்சம்
*மாற்றுத்திறனாளிகள்: 4.63 லட்சம்
* மூத்த குடிமக்கள் 3.99 லட்சம்
தேர்தல் ஆணையத்தின் இறுதி புள்ளி விவரங்கள்படி, புதிய வாக்காளர்களையும் சேர்த்து, தற்போது எண்ணிக்கை 5.67 கோடியாக உள்ளது.
கடந்த காலங்களில் இரட்டை வாக்காளர்கள், இறந்தவர்கள் வாக்காளர்களாக பட்டியலில் இருந்த நிலையிலேயே 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகின.
இந்த முறை அத்தகைய வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப் பதிவு சதவீதம் இயல்பாகவே 80%க்கும் அதிகமாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது.
இலவச திட்டங்கள், அரசியல் கட்சிகளின் கவனிப்புகள், விஜயின் வருகை, அவருக்கான ஆதரவை பார்க்கும் போது, புதுச்சேரியை போலவே தமிழகத்திலும் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை தொட்டால், அது தேர்தல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
===============