

அதிமுகவை சாடிய விஜய்
D. Jayakumar slams TVK Vijay on Karur Stampede Death : தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், பாஜக, திமுகவை கடுமையாக சாடினார். அதிமுக பற்றி நேரடியாக எதுவும் தெரிவிக்காத அவர், ஊழல் கட்சி என்று மட்டும் விமர்சித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி கிடையாது, தனித்து போட்டியிட்டு, ஆட்சியை பிடிப்பதே தவெகவின் லட்சியம் என்பதில் விஜய் உறுதியுடன் நிற்கிறார்.
விஜய்க்கு அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
அதிமுக தரப்பில் பதிலடி
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜயின் நடனம், சம்பளம், கட்சி நிதி உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சம்பளத்தில் கறுப்பு, வெள்ளை?
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், “விஜய் வாங்கும் சம்பளத்தில் கறுப்பு அதிகம், வெள்ளை குறைவு. வாங்கிய சம்பளத்தை விஜயால் வெளியே சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
ஊழல் பற்றி விஜய் பேசலாமா?
அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், செங்கோட்டையன் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசலாமா என்று ஜெயக்குமார் சாடினார்.
விஜய் முகத்திரையை கிழிப்போம்
விஜய் தனது சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொல்லட்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இப்படிப்பட்டவர்களின் முகத்திரையை அதிமுகவினர் கிழிக்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
தவெக கட்சி நிதி!
திமுகவை விமர்சிக்கும் விஜயின் கட்சி நிதி குறித்து ஜெயக்குமார் கடுமையாக சாடினார். “ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்கிறது” என்று ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
செங்கோட்டையன் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்று சுட்டிக்காட்டிய அவர், இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி பேசுவது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
காப்பாற்றிக் கொள்ள விசில் அடிக்கிறார்கள்
தவெகவினர் ஆபத்தில் இருப்பதால் தங்களை காப்பாற்ற விசில் அடிக்கின்றனர் என்றும் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்த நிலையில் விஜய் குற்ற உணர்வின்றி நடனமாடியதை ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.
அதிமுகவை தொட்டால் விட மாட்டோம்
“விஜய் இப்படி மேடையில் நடனமாடியதால் கரூரில் இறந்த 41 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனைப்படும்” என்று கூறிய அவர், போட்டி என்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் என்று தெரிவித்தார்.
அதிமுகவை தொட்டால் யாராக இருந்தாலும் விடமாட்டோம் என்றும் ஜெயக்குமார் எச்சரித்தார்.
============