

திராவிட கட்சிகளை புறக்கணித்த தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தல் யாரும் எதிர்பாராத முடிவை தந்து இருக்கிறது. 60 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள், முதன்முறையா எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்து இருக்கின்றன.
முதல் தேர்தல் - நேரடியாக முதல்வர்
விஜய் சில தொகுதிகளில் வெற்றி பெறுவார், ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி அரியணை ஏறி இருக்கிறது தவெக.
முடிவை மாற்றிய இளம் தலைமுறை
இதற்கு முக்கிய காரணம் இளம் தலைமுறையினரின் வாக்குகள். திராவிட கட்சிகளின் இலவசங்கள், நலத் திட்டங்கள் எதுவும் இந்த தேர்தலில் பலிக்கவில்லை. குறிப்பாக ஓட்டுக்கு பணம் பெரிய அளவில் தோல்வியை தழுவி இருக்கிறது.
செலவு செய்தால் தேர்தலில் வெற்றி என்ற கணக்கை முறியடித்து காட்டி இருக்கிறது தவெக. பெண்கள், சிறுபான்மை வாக்குகளை அள்ளி இருக்கிறார் விஜய்.
திராவிட கட்சிகளை எதிர்த்த அண்ணாமலை
அவரது இந்த எழுச்சி, தமிழக இளம் தலைவர்கள் இடையே புதிய எண்ணங்களை விதைத்து இருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றவர் அண்ணாமலை. திமுகவையும் அதிமுகவையும் மிகக் கடுமையாக விமர்சித்து பேசியதால் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு கூடியது.
பாஜகவின் வாக்கு வங்கி உயர்வு
2024ல் மக்களவை தேர்தலை அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக சந்தித்தாலும், அந்த தேர்தலில் தமிழக பாஜக 10 சதவீதத்தை விட அதிக வாக்குகளை பெற அண்ணாமலை காரணமாக இருந்தார்.
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, அதிமுக - பாஜக கூட்டு சேர வசதியாக, தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் அண்ணாமலை. பின்னர் ஓரங்கப்பட்ட அவர், தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டார்.
தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை?
இந்த நிலையில் சில தினங்களாக அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. முதல்வர் விஜய்யை போன்று, தனிக்கட்சி தொடங்கி, இனி வரும் தேர்தல்களில் தமிழக அரசியலில் முக்கிய நபராக மாறி, ஒரு கட்டத்தில் ஆட்சியை பிடிக்கவும் அவர் வியூகம் வகுத்து வருவதாக தெரிகிறது.
சமாதான முயற்சியில் பாஜக
இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்து இருக்கிறது. இதற்காக அவர் டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளார்.
தேசிய அரசியலை ஏற்பாரா அண்ணாமலை
ராஜ்யசபா எம்பி, மத்திய அமைச்சர் பதவி அவருக்கு தரப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், தேசியக் கட்சி என்ற அடையாளம் இல்லாமல், தனிக்கட்சி தொடங்கி, இளம் வாக்காளர்கள், பெண்களின் வாக்குகளை அள்ளுவதே அண்ணாமலையில் சீக்ரெட் மூவ் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தமிழகத்தில் முக்கோண அரசியல்
அப்படி அண்ணாமலை களமிறங்கினால், தமிழக அரசியல் விஜய்-உதயநிதி-அண்ணாமலை என்ற முக்கோண அரசியலை நோக்கி நகரவும் வாய்ப்பு இருக்கிறது.
அண்ணாமலையின் பிறந்தநாள் அன்று புதிய கட்சி அறிவிப்பு வெளியாகும் என்ற குஷியில் அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.
===============