

ஆளுநர் vs தமிழக அரசு
Governor RN Ravi on TN Govt Bill Approval : தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம், எந்த பிரச்சினை என்றாலும் ஆளுநர் மாளிகைக்கு சென்று திமுக புகார் அளிக்கும். ஆனால், ஆளும் கட்சியாக வந்து விட்டால், ஆளுநர் தேவையில்லை என்ற குரல் ஓங்கி ஒலிக்கும்.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை என்ற குற்றச்சாட்டை திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் அடிக்கடி எழுப்பி வருகின்றன.
உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள்
இந்தநிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ”தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் தாமதம் செய்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை எனவும் சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பொதுவில் முன் வைக்கப்பட்டுள்ளன.
81% மசோதாக்களுக்கு அங்கீகாரம்
2025 அக்டோபர் 31 வரை மொத்தம் 211 மசோதாக்கள் கிடைத்துள்ளன. இதில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அவற்றில் 95 சதவீத மசோதாக்கள் மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும்.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள்
மேலும் 13 சதவீத மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன; இதில் பெரும்பாலானவை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அனுப்பப்பட்டவை தான்.
குற்றச்சாட்டுகள் பொய்
தற்போது கைவசம் உள்ள எட்டு மசோதாக்கள் அக்டோபர் மாத இறுதி வாரத்தில் வந்தவை. அவை இன்னும் பரிசீலனையில் உள்ளன. எனவே, இந்த விவரங்கள் சமூக ஊடகங்களிலும் பொது இடங்களிலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும்.
விதிகளுக்கு முரணான மசோதாக்கள்
சட்டசபைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சட்டசபையால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 10 மசோதாக்கள் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து முடிவு அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டசபையால் நிறைவேற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட போது, அவை யுஜிசி ( UGC ) விதிகளுக்கு முரணானவை. சட்டசபையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்பதால், அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக ஆளுநர் அனுப்பி வைத்தார்.
சட்டத்தின் ஆட்சி - ஆளுநரின் கடமை
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ஆளுநர் ஒவ்வொரு மசோதாவையும் ஆய்வு செய்துள்ளார். அரசியலமைப்பின் விதிகளின்படி ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
ஆளுநரின் முக்கிய கடமை
மாநில மக்களுக்கு மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும், ஜனநாயக செயல்முறைகளுக்கு உட்பட்டு, தனது அரசியலமைப்பு கடமைகளை செய்து வருகிறார். அனைத்து சட்டங்களும் அரசியலமைப்பிற்கு உட்படுவதை உறுதி செய்வதற்கு ஆளுநர் கடமைப்பட்டுள்ளார்.
தமிழக மக்களின் நலன் முக்கியம்
தமிழ் பாரம்பரியம், கலை, இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் முயற்சிகளை ஆளுநர் தொடர்ந்து ஆதரித்து வருகிறார் . தமிழக மக்களின் நலனுக்காக, அரசியலமைப்பின் வரம்புக்குள் பொறுப்புடன் செயல்படுவேன் என ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்” இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.