

கவன ஈர்ப்பு தீர்மானம்
தமிழக சட்டசபை இன்று கூடியதும் கோவை மாணவர் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க அரசு, இந்த 100 நாட்களில் சட்டம் - ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும்.
உரிய விசாரணை, விரைந்து நீதி தேவை
போதைக்கு எதிரான தொடர் ஒழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவையில் மாணவர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கோஷ்டி மோதல் என்று அமைச்சர் கூறுகிறார்.இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
கோஷ்டி மோதல்? - அதிமுக கேள்வி
25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்? என கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினர் காமராஜ், “ கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஒருவரை 25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து பேசுகையில், “ மனம் பதறுகிறது. உரிய நீதி வேண்டும். போதைப்பொருள் குறித்து தகவல் கொடுத்ததால் மாணவர் கொலை. உரிய சட்டம் இயற்ற வேண்டும்.
ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உண்மை நிலவரம் - மாற்றி சித்தரிப்பு
இதையடுத்து, அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் கொடுத்தார். “கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு, உண்மை நிலவரத்துக்கு மாறாக சித்தரிக்கப்படுகிறது. கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்.
போதைப்பொருள் கிடையாது - முன்விரோதம் தான்
எனவே, இதை போதைப்பொருள் விவகாரமாக சித்தரிக்க வேண்டாம். மேலும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கோ, காவல்துறைக்கோ இல்லை. அமுதன் கொலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 3 மாதங்களுக்குள் குற்றப்பதிரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.” என்றார்.
அமைச்சர் பதிலடி, திமுக எதிர்ப்பு
ஜாபர் சாதிக் விவகாரத்தை பற்றி அமைச்சர் பேசிய நிலையில், அதற்கு பதிலடியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக எம்எல்ஏ ஐ.பி.எல் ஸ்டேடியத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சொல்ல, அவையில் பலத்த கூச்சல் எழுந்தது.
திமுக வெளிநடப்பு
அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க, உதயநிதி பதிலளித்தார். கோவை விவகாரத்தில் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
==================