
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளி பணியாற்றியவர் 27 வயதான அஜித்குமார். நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இச்சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம், பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, அஜித்குமார் வழக்கை சிபிஐ வசம் திமுக அரசு ஒப்படைத்து இருக்கிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து அஜித்குமார் வழக்கை விசாரணைக்கு ஏற்று, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை :
இளைஞர் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. உடலில் 50 வெளிப்புற காயங்கள் உள்ளன. 12 சிராய்ப்பு காயங்கள், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு காயங்கள்; ‘காயங்கள் வெறும் வெளிப்படையான காயங்கள் அல்ல; ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளன.
கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் :
ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கிய அடையாளங்கள் தெளிவாக உள்ளன. பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. வயிறு நடுவே கம்பியால் குத்தப்பட்டுள்ளது.
தலையில் கம்பியால் அடிப்பு :
தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு; மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும். சிகரெட் சூட்டால் சித்தரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம், தனிப்படை காவலர்கள் அஜித்குமாரிடம் எந்த அளவு கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
=====