

எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விருப்பமில்லை
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த 18 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசினார்.
எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு அரசின் அணுகுமுறை
பேரவையில் உரையாற்றிய முதல்வர் விஜய், "எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துப் பேரவையில் எதிர்க்கட்சிகள் வைக்கும் கருத்துகளைக்கூட, மக்கள் மீது அவர்களுக்கு உள்ள கவலையை வெளிப்படுத்துவதாகவே இந்த அரசு எடுத்துக்கொள்கிறது.
உள்நோக்கத்துடன் கூடிய கருத்தாக இருந்தாலும், அதில் உண்மை இருக்கிறதா என்று பரிசீலிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
போதை ஒழிப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு
குற்றங்களுக்கு போதை கலாச்சாரம்தான் முதன்மை காரணம் என கண்டறியப்பட்டு, அதை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 4,000 கிலோவுக்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
மேலும், "பதவியேற்ற நாள் முதல் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் உறுதியாக உள்ளேன். இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடந்த 2021 - 2025-ஆம் ஆண்டு கால குற்றங்களைப் பட்டியலிட்டுப் பேசி தப்பித்துவிட எனக்கு விருப்பமில்லை" என்றும் அவர் கூறினார்.
தனிப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம்
அரசியல் ரீதியாக எந்தக் கருத்துகளையும் கூறலாம்; ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய முதல்வர், "ஆர்த்தோ சர்ஜன் போல பேரவைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார்.
எலும்பை உடைப்பேன் என்பது தான் அரசியலா?
சட்டப்பேரவையில் எலும்பை உடைப்பேன் என்று பேசுவதற்கு பெயர் தான் அரசியலா? இப்படிப் பேசி பேசியேதான் இன்று அந்தப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்" என்று விமர்சித்தார்.
திமுகவினருக்கு அறிவுரை கூற வேண்டாம் என எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியபோது, "திமுகவினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை" என்றும் விஜய் பதிலளித்தார்.
பழைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி
தொடர்ந்து பேசிய அவர், "திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று மற்றொரு உறுப்பினர் கூறுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
துருப்பிடித்த அரசியல் நமக்கு எதற்கு?
ஜெயலலிதா எதிர்க்கட்சியினரால் பல அவமானங்களைச் சந்தித்தார். அந்தக் காலத்தின் துருப்பிடித்த அரசியல் நமக்கு எதற்கு? நாம் எது பேசினாலும் 'நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள்' என்று கூறுகிறார்கள். மிசாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்று கூறி முதல்வர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.
=====