

திருப்பரங்குன்றம் தீபத்தூண்
Thiruparankundram Deepathoon issue : திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கோரி, மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்.'இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை' என, உத்தரவிட்டார்.
மேல்முறையீடு
ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு
அரசு தரப்பு மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி, செய்ய மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன்,
''கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.
தலைமைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி
ஆனால், தீபம் ஏற்றபடவில்லை. இது தொடர்பான அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி, 'தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.
வீடியோ கான்பரசிங்கில் ஆஜர்
இதன்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு ஆஜராகினர்.
நீதிபதி ஆவேசம்
‘‘திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம், ஒழுங்கை காரணம் காட்டுவது நியாயமற்ற செயல்’’ என்று குறிப்பிட்டார்.
விசாரணை ஒத்திவைப்பு
144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்த தலைமைச் செயலாளர், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து வழக்கை அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
===============