
சென்னை கந்தக்கோட்டம் கோவில்
Madras HC on Commercial Complex in Temple Land : சென்னை கந்தக்கோட்டத்தில் முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடங்களில், கோவில் நிதியை கொண்டு வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கட்ட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
கோவில் நிலத்தில் வணிக வளாகம் - எதிர்ப்பு
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோவில் நிதியை பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பல கோவில்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
தமிழக அரசு வாதம்
தமிழக அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பக்தர்கள் வசதிக்காக பயன்படுத்த உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கந்தக்கோட்டம் முத்துகுமாரசுவாமி கோவில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை தொடர அனுமதியளித்து உத்தரவிட்டனர். அதேசமயம், அந்த கட்டுமானங்களை அறநிலையத் துறைச் சட்டப்படி, பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் படிக்க : சாலை, பாலங்களுக்கு 78,000 கோடி! : வெள்ளை அறிக்கை கோரும் அண்ணாமலை
அறநிலையத்துறை ஆணையருக்கு எச்சரிக்கை
இந்த மனுவுக்கு நவம்பர் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் அவர்கள் ஆணையிட்டனர். மேலும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கை வெளியிட அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.
====================