

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு படிப்படியாக சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
இந்தமுறை நான்கு முனைப்போட்டி உறுதியாகி விட்ட நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா அல்லது தவெக பக்கம் சாயுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?
ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் அதாவது 42 சீட் வரை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை திமுக ஏற்குமா என்பது சந்தேகம் தான். கடந்த தேர்தல் காங்கிரசுக்கு திமுக 25 இடங்களை ஒதுக்கியது.
கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மற்றொரு கட்சியான மதிமுகவுக்கு கடந்த முறை 6 தொகுதிகள் தரப்பட்டன. 2019 மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மற்றும் ராஜ்யசபா சீட் தரப்பட்டது. வைகோ ராஜ்யசபா எம்பியானார்.
12 தொகுதிகள் மதிமுக டிமாண்ட்
அவரது பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், இந்த முறை திமுக கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்க மதிமுக முடிவு செய்து இருக்கிறது.
“ஆட்சி அதிகாரத்தில் மதிமுக ஒரு போதும் பங்கு கேட்டதில்லை; இனியும் கேட்க மாட்டோம்” என்பதில் மதிமுக நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
பம்பரம் கட்சியினர் வருத்தம்
ஆனால், இந்தமுறை 12 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில், மதிமுகவினர் மல்லுக்கட்ட தயாராய் இருக்கிறார்கள். ராஜ்யசபா இடத்தை கமல்ஹாசனுக்கு கொடுத்ததில் பம்பரம் பார்ட்டிகளுக்கு தாங்கமுடியாத வருத்தம் தான்.
மதிமுகவுக்கு 12 தொகுதிகள் தேவை
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக 12 தொகுதிகள் மதிமுகவிற்கு அவசியம் தேவைப்படுகிறது. எனவே, கடந்த முறை போல இல்லாமல் எதிர்பார்க்கும் தொகுதிகளை கேட்க மதிமுக தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள்.
கூடுதல் தொகுதிகள் - வைகோ பச்சைக்கொடி
இதுகுறித்துப் பேசிய கட்சி நிர்வாகிகள் "2021 சட்டமன்றத் தேர்தலில் 6ல் போட்டியிட்டு 4ல் வெற்றி பெற்றோம். வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதாக நிர்வாகிகள் வேதனையில் இருக்கிறார்கள்.
எனவே, கூடுதல் தொகுதிகள் என்பதில் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். இதற்கு வைகோவும் பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது.
12 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு
இதனிடையே தனிப்பட்ட முறையில் துரை வைகோ எடுத்த கணிப்பில், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 தொகுதிகளில் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
குஸ்திக்கு தயாராகும் கூட்டணி கட்சிகள்
ஒன்று 12 தொகுதிகள் அல்லது ஏப்ரலில் காலியாகும் ராஜ்யசபா இடங்களில் ஒன்றை வைகோவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே மதிமுகவினரின் நிலைப்பாடு.
எனவே, திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை அமைத்தவுடன், குஸ்தி இருக்கிறது என்கின்றனர் கூட்டணி கட்சியினர்.
=====