

தமிழகத்தில் நீடிக்கும் வெப்பம்
தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்த பின்னரும் நீடித்து வந்த வெயிலின் தாக்கம் தணிந்து, நேற்று இரவு முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த சூரைக்காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
வெளுத்து வாங்கிய மழை
இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவினாலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எந்த மாற்றமும் இல்லை. புறநகர் பகுதிகளில் மழை பெய்தாலும், நகருக்குள் மிதமான மழையே பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று வீசினாலும், தூறலோடு அது முடிவுக்கு வந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னைக்கும் மழை வாய்ப்பு
அதேபோல், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
=====