

அனைத்துக் கட்சிக் கூட்டம் - நாடகம்
Minister L. Murugan on Fake Voters in Kolathur Constituency : தமிழகத்தில் வாக்களர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை திமுக நாடி இருக்கிறது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “ அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தியுள்ளார்.
பிரச்சினைகளை திசைதிருப்ப முயற்சி
அவர்கள் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் வரும் போது எல்லாம், அதனை திசை திருப்புவதற்காக பல்வேறு விஷயங்களை கையில் எடுப்பது அவர்களது வாடிக்கையாக இருந்து கொண்டு இருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து இருக்கிறார்கள்.
தவறுகளை திருத்தவே SIR
வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் அவசியமே, இரட்டை வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்கள், போலியான வாக்காளர்களை களைவது தான். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அவசியமாக இருந்தது. கிட்டத்தட்ட 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர்.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
அதைப்போன்றுதான் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம்; அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொளத்தூரில் போலி வாக்காளர்கள்
ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நியாயமான வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம், உண்மையான வாக்காளர்களை கொண்டு வருவது தான் நோக்கம். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று பலமுறை திமுகவினரே சொல்லி இருக்கிறார்கள்.
வாக்களிப்பு - சரியான பட்டியல் தேவை
முறையான தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் ஜனநாயக நாட்டில் சரியான வாக்களிப்பு இருக்கும். உச்சநீதிமன்றம் தெரிவித்ததன் அடிப்படையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது” இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.
=======================