
கரூர் துயரச் சம்பவம் :
MP Anurag Thakur Letter To CM Stalin on Karur Incident : கரூரில் நடிகர் விஜய் கடந்த வாரம் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
என்டிஏ குழு நேரில் ஆய்வு, விசாரணை
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட எம்பிக்கள் குழு, கரூரில் துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்த குழுவினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தது.
முதல்வருக்கு அனுராக் தாகூர் கடிதம் :
இந்தநிலையில், என்டிஏ குழுவில் இடம்பெற்று இருந்த பாஜக எம்பிக்களில் ஒருவரான அனுராக் தாகூர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும்(Anurag Thakur Letter To MK Stalin) கடிதத்தில், ”கரூர் மக்கள் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அவர்களின் மனதில் இதற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
கடிதத்தின் முக்கிய சாராம்சம் :
இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும், பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
1. கரூரில் கூட்ட நெரிசல்(Karur Stampede) ஏற்பட வழிவகுத்த முதன்மைக் காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?
2. நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
3. ஆரம்ப விசாரணையின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்த போதிலும் கூட நெரிசல் ஏற்பட காரணம் என்ன ?
4. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கை மற்றும் பரிந்துரைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
5. கரூர் சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதேனும் காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளதா, அதனை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும்.
தலைமை செயலாளருக்கு கடிதம்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழுவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ள இந்தக் கடிதம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. முதல்வரின் கவனத்திற்காகவும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : ’விஜய் மீது வழக்கு போட ஏன் அச்சம்?’: திமுக அரசுக்கு திருமா கேள்வி
முதல்வரிடம் பதில் எதிர்பார்ப்பு
எனவே, பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் வகையில், துறை வாரியாக விரிவான பதில்களைக் எதிர்பார்க்கிறோம். இந்த அவசர விஷயத்தில் சரியான நேரத்தில் உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்” இவ்வாறு அந்தக் கடிதத்தில் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
===