

கூடுதலாக 100 சீட்கள்
அதன்படி, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக தலா 50 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தலா 100 ஆக இருந்தஇந்த கல்லூரிகளின் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம், 2026-27 கல்வியாண்டு முதல் இந்த இரண்டு கல்லூரிகளிலும் கூடுதலாக 100 பேர் மருத்துவம் படிக்க முடியும்.
மொத்த இடங்கள் அதிகரிப்பு
நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றின் விரிவாக்கத்தால், மாநிலத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 5,150 ஆக உயரும்.
மருத்துவ மதிப்பீடு மற்றும் தரமதிப்பீட்டு வாரியம், 2019 ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் கீழ் இரு கல்லூரிகளுக்கும் அனுமதிக் கடிதங்களை வழங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் கல்லூரியிலும் கூடுதல் இடங்கள்?
திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கு இதேபோன்ற ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 ஆண்டுகளில் முதன்முறையாக அதிகரிப்பு
ஐந்து ஆண்டுகளில் அரசு இடங்கள் அதிகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 2021-இல் முந்தைய அதிமுக அரசின் பதவிக்காலம் முடிவடையும் தருவாயில், மாநிலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
ஆனால், அதன்பிறகு கல்லூரிகளின் எண்ணிக்கையோ அல்லது அவற்றின் இடங்களின் எண்ணிக்கையோ அதிகரிக்கவில்லை.
குறைந்த கட்டணத்தில் படிக்க வாய்ப்பு
அரசு மருத்துவ இடங்கள் அதிகரிப்பது என்பது சிறந்த மருத்துவப் பாடப் பொருட்கள், உயர்ந்த கற்பித்தல் தரம் மற்றும் திறமையான மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் ஆகியவற்றை வழங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்
இந்தக் கூடுதல் இடங்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்குத் தகுதிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையானது 69 சதவீத இட ஒதுக்கீட்டு விதியின்படி, நீட் - யுஜி 2026 தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக் குழுவால் கைளாப்படுகிறது.
=============