
முக்கியமான மூன்று அமாவாசைகள் :
Aadi Amavasai 2025 : தமிழ் மாத கணக்கின்படி, ஆண்டுக்கு 12 அமாவாசைகள் வரும். அந்த நாளில் வீட்டில் படையலிட்டு முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்துவார்கள். அமாவாசைகளில் மூன்று முக்கியமானவை. அவை ஆடி அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகும்.
இன்று ஆடி அமாவாசை :
அதன்படி ஆடி அமாவாசை இன்று(Aadi Amavasai 2025) கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது என்பது அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவு செய்யப்படும் முக்கிய சடங்காகும். தர்ப்பணம் செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு செய்வது நம் முன்னோர்களால் தொன்று தொட்டு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயமாகும். தர்ப்பணம் செய்வதன் மூலம் நாம் பெரியோர்களை மகிழ்விக்கிறோம் மற்றும் நாமும் மகிழ்கிறோம். ஆடி அமாவாசை நன்னாளில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் அவர்களின் ஆசி முழுவதுமாக நாம் பெறுகிறோம்.
தாமிரபரணியில் புனித நீராடல் :
தமிழகம் முழுவதும் ஆடி அமாவாசை 2025 இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தென்மாவட்ட மக்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம்(Aadi Amavasai Tharpanam 2025) கொடுத்தனர். வாழை இலைகளில் எள், அரிசி மாவுப் பிண்டம், வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி போன்றவற்றை வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடு :
புகழ்பெற்ற ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, இறைவனை சேவித்தனர்.
முன்னோர்க்ளை நினைவுகூர்ந்து வழிபாடு :
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறுகள், குளக்கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அருகில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன
====