

வடகிழக்கு பருவமழை
Orange alert for 7 TN districts as low pressure system strengthens in Bay of Bengal : தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி கரையை கடந்ததால், எதிர்பார்த்த அளவு கனமழை பெய்யவில்லை. இருப்பினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. வரும் 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
தமிழகம் நோக்கி தாழ்வுப்பகுதி
இதன்காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு, வடக்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும்.
ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழை பெய்யும். இதேபோன்று, நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வுப்பகுதி கரையை நோக்கி நகரந்து வருவதால், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. விசைப்படகு மீனவர்களும் எச்சரிக்கையும் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
===