
தமிழகத்தில் ஒற்றை ஆட்சி :
Anbumani Ramadoss Statement : தமிழகத்தில் இதுவரை ஒற்றை கட்சி ஆட்சிதான் இருந்து வருகிறது. காங்கிரசில் தொடங்கிய தமிழக அரசு, திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியை 50 ஆண்டுகளாக பார்த்து வருகிறது.
கூட்டணி ஆட்சி - ஒலிக்கும் குரல்கள் :
அண்மைக் காலமாக கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் குரல் கொடுக்க மற்ற கட்சிகளும் மெதுவாக அதை ஆமோதித்து வருகின்றன.
அதிமுக கூட்டணி நிலைப்பாடு :
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும், 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என அடித்துக் கூறி வருகிறது. இதை அதிமுக மறுத்தாலும், தேர்தல் முடிவுகளை பொருத்து, மாற்றங்களை அக்கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது.
கூட்டணி ஆட்சி, விஜய் ஏற்பாரா? :
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(TVK Vijay) தனித்து போட்டி என்ற கோஷத்தை முன்வைத்தாலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தால் கூட்டணி அமைக்கலாம். ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு கொடுக்கலாம்.
ஆட்சி பங்கு, பாமகவின் ஆசை :
இப்படி இருக்கையில், தந்தை மகன் பிரச்னையில் துவண்டு போயிருக்கும் பாமகவும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை கையில் எடுத்து இருக்கிறது. ''தமிழகம், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தை ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும்'' என அக்கட்சியின் தலைவர் அன்புமணி(Anbumani Ramaodss) வலியுறுத்தி இருக்கிறார்.
பாமகவின் உரிமையை வெல்வோம் :
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம். ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம். பாமக இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாமகவிற்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை.
பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும் என்றால், ஆட்சியில் பங்கு அவசியம். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் ராமதாசால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்” இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
====