

பாமகவில் உச்சக்கட்ட மோதல்
Anbumani Ramadoss Removed GK Mani From PMK : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகனும் செயல் தலைவருமான அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. நிர்வாகிகள் நீக்கம், நியமனம், தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள், காட்டமாக அறிக்கைகள் என இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.
ராமதாஸ் vs அன்புமணி
இந்தநிலையில், வரும் 29ம் தேதி சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூடுகிறது. இது உண்மையான பாமக கிடையாது என்றும், பொதுக்குழுவில் பாமக கொடி, பெயரை பயன்படுத்த கூடாது என்று அன்புமணி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அன்புமணியை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும், உண்மையான பாமக தன் பக்கம் இருப்பதாகவும் ராமதாஸ் அதிரடி காட்டுகிறார்.
கௌரவத் தலைவர் ஜி.கே. மணி
பாமகவின் தலைவராக இருந்த ஜி.கே. மணி(GK Mani Removed From PMK), செயல் தலைவராக அன்புமணி பதவியேற்ற பிறகு, கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ராமதாஸ் பக்கம் நிற்பதால், அவர் மீது அன்புமணி கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஜி.கே.மணி vs அன்புமணி
இந்தநிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து ஜி.கே.மணி நீக்கம் செய்யப்படுவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜி.கே. மணிக்கு நோட்டீஸ்
”பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18ம் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
ஜி.கே. மணி விளக்கம் அளிக்கவில்லை
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை .
ஜி.கே. மணி நீக்கம்
கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.
அதை ஏற்று ஜி.கே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக அன்புமணி இராமதாஸ் அறிவித்திருக்கிறார்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=================