

அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு
Anbumani Ramadoss Condemns DMK on Cuddalore Farmer set on Fire To Death Issue : அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இராஜேந்திரன் என்ற விவசாயி மர்ம கும்பலால் கொடூரமான முறையில் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எரிக்க முடியும் எனும் நிலைக்கு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று என்று பதிவிட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் விவசாயி
இதைத்தொடர்ந்து, பதிவிட்டுள்ள அவர் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது விவசாயி இராஜேந்திரன் இன்னொருவரின் இரு சக்கர ஊர்தியில் ஏறி பண்ருட்டி நகரத்திற்கு சென்று கொண்டிருந்த போது மகிழுந்தில் பின்தொடர்ந்து வந்த கும்பல் இந்த படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது. இதில் 70% தீக்காயம் அடைந்த இராஜேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே சட்டம் - ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பொது இடங்களில், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் படுகொலைகள், தாக்குதல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 7500 படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால், கொலைகளையும் குற்றச்செயல்களையும் தடுப்பதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் - ஒழுங்கை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து தினம் தோறும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும், அது குறித்து ஆட்சியாளர்கள் எந்தக் கவலையும்படுவதில்லை. அதன் விளைவு தான் 70 வயது விவசாயியை உயிருடன் எரித்து படுகொலை செய்யும் முயற்சி அரங்கேறியிருக்கிறது.
காயமடைந்த விவசாயிக்கு சிறப்பான மருத்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.