

லாரி ஒப்பந்தத்தில் ஊழல்
Anbumani Ramadoss Slams DMK Government : தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகள் மற்றும் அரவை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அன்புமணி அறிக்கை
வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரவை நிலையங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லவும்,
அவை அரிசியாக்கப்பட்ட பிறகு வட்ட கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்லவும் சரக்குந்துகள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப் படுகின்றன.
இதற்காக 2024-25ஆம் ஆண்டில் மட்டும் 3200 சரக்குந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக ஒவ்வொரு சரக்குந்துக்கும் வழங்கப்பட்ட வாடகையை விட 321% கூடுதலான தொகை இதற்கான ஒப்பந்தத்தை பெற்ற 3 சரக்குந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது.
மாநில அளவில் ஒப்பந்தம்
நெல் மூட்டைகளை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் அளவில் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. முருகா எண்டர்பிரைசஸ், கந்தசாமி அண்ட் கோ, கார்த்திகேயா எண்டர்பிரைசஸ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் ஒப்பந்த விதிகளை தமிழக அரசு மாற்றி அமைத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
168 கோடியை சுறுட்டியுள்ளது
இந்த ஒப்பந்தத்தை பெறும் நிறுவனங்கள் அவற்றிடம் உள்ள சரக்குந்துகளை மட்டுமே பயன்படுத்தி, கொள்முதல் நிலையங்களில் சேரும் நெல் மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். ஆனால், ஒப்பந்தம் பெற்ற 3 நிறுவனங்களும் வேறு 19 சரக்குந்து நிறுவனங்களுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.165 கோடியை சுருட்டியுள்ளனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க : திமுக அரசின் ’888 கோடி’ ஊழல் - அண்ணாமலை, அன்புமணி காட்டம்!
சதி நடக்க வாய்ப்பு
மேலும், சந்தையில் ஒரு டன் நெல்லை 8 கி.மீ கொண்டு செல்வதற்கு உள்ளூர் சரக்குந்துகள் அதிகபட்சமாக ரூ.143 மட்டும் தான் வசூலிக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஒரு டன்னுக்கு ரூ.598 வழங்கும் வகையில் 3 சரக்குந்து நிறுவனங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்பதால், இதன் பின்னணியில் ஒப்பந்தம் பெற்ற சரக்குந்து நிறுவனங்களுக்கும், தமிழக ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கும் இடையே கூட்டுச் சதி நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன என்று விமர்சித்துள்ளார்.
திமுக என்றாலே விஞ்ஞான ஊழல் தான்
திமுக என்றாலே விஞ்ஞான ஊழல்(DMK Corruption) தான் என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. திமுக அரசின் ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகி வருகின்றன. சரக்குந்துகளுக்கு ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் போக்குவரத்து ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பின்னணியில் உள்ள உண்மைகளையும், கூட்டுச் சதியையும் வெளிக்கொண்டு வரும் வகையில் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.