

தமிழகம் - சூடு பிடிக்கும் களம்
PMK Mango Symbol Issue : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பாமகவில் பிளவு
பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அந்தக் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.
தொண்டர்களும், நிர்வாகிகளும் இரு பிரிவுகளாக இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் அன்புமணி இடம்பெற்று விட்டார். ராமதாஸ் எந்தக் கூட்டணிக்கு செல்வார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
மாம்பழ சின்னம் - வழக்கு
கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ், அன்புமணி இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு பாமகவின் மாம்பழம் சின்னம் ஒதுக்கி ஆணை கடிதம் அனுப்பியது.
அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து, ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அன்புமணி மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
"போலி ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தல் ஆணையத்தை குழப்பியுள்ளனர். அன்புமணியின் பதவிக்காலம் 2025 மே மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் விசாரணை
கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் என் முகவரிக்கு கடிதம் வழங்க சொல்லி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அன்புமணிக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் ராமதாஸ் கோரியிருந்தார்.
தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.
அன்புமணி தரப்பு, அனுமதி மறுப்பு
இந்த வழக்கில் வாதிட அன்புமணி தரப்பு முயற்சி செய்த நிலையில், எதிர்தரப்பினராக இல்லாதபோது வாதிட முடியாது என தெரிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி மறுத்து விட்டனர்.
==================