

டெல்லியில் மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை கொண்டு வீசி வருவதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை உள்ளது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தீவிரம் பெறும் ஆர்ப்பாட்டங்கள்
நாளுக்கு நாள் இவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம்
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள், இளைஞர்களின் பேராதரவோடு நடந்த இந்தப் போராட்டம், தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி பெற்றுத் தந்தது.
மெரினாவில் போலீசார் குவிப்பு
அந்தப் போராட்டத்தை போல நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைய கூடும் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர்கள் சிலை வரை கடற்கரைக்கு செல்லும் வழியில் பேரிகார்டுகளை வைத்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
====