

தமிழகத்தில் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் தற்போது வரை அத்தியாவசியப் பொருட்களின் விலை சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மளிகைப் பொருட்களின் தற்போதைய சந்தை நிலவரம்
அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.220-க்கு விற்ற மிளகாய் வற்றல் தற்போது ரூ.340-க்கும், ரூ.120-க்கு விற்ற மல்லி தற்போது ரூ.160-க்கும், ரூ.120-ஆக இருந்த துவரம் பருப்பு தற்போது ரூ.150-க்கும் விற்பனையாகின்றன.
உளுந்து கிலோ ரூ.160, பாசிப்பருப்பு ரூ.160, கடலைப் பருப்பு ரூ.100 என்ற அளவில் விற்கப்படுகின்றன. ரூ.180-க்கு விற்ற பூண்டு திடீரென ரூ.340-க்கு உயர்ந்துள்ளது. மிளகு கிலோ ரூ.1,000-க்கும், சீரகம் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
சூரியகாந்தி சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.150-லிருந்து ரூ.185-ஆகவும், பாமாயில் ரூ.120-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரித்துள்ளன. பாதாம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட உலர் பழங்களின் விலை கிலோ ரூ.1,200 வரை விற்கப்படுகிறது.
அதேநேரத்தில், சர்க்கரையின் விலை கிலோ ரூ.70-லிருந்து ரூ.60-ஆக குறைந்துள்ளதுடன், வெங்காயத்தின் விலையும் சற்று சரிந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
உயரும் அரிசி மற்றும் காய்கறி விலைகள்
மேலும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. பச்சரிசி கிலோ ரூ.70-க்கும், முதல் ரக புழுங்கல் அரிசி ரூ.75-க்கும், இரண்டாவது ரக புழுங்கல் அரிசி ரூ.60-க்கும் விற்கப்படுகின்றன.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்து அரிசி விலை உயர்ந்துள்ளதாகவும், புதிய அரிசி வரத்து தொடங்கும் டிசம்பர் மாதம் வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.85-க்கும், கேரட் மற்றும் பீன்ஸ் தலா ரூ.90-க்கும் விற்பனையாகின்றன.
தக்காளி, உருளைக்கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் உட்பட விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வாங்கும் திறன் குறைவும் பதுக்கல் அச்சமும்
மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், முன்பு அரை கிலோ வாங்கியவர்கள் தற்போது கால் கிலோ மட்டுமே வாங்குவதாகவும் சிறிய மளிகைக் கடை விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், சிலர் பொருட்களைப் பதுக்கி வைப்பதாக தெரியவருவதால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, அரசு பதுக்கல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மொத்த விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க கோரிக்கை
விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவு மற்றும் பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வை சமாளிக்க அரசு உடனடியாக சந்தை விவகாரங்களில் தலையிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விலை உயர்ந்த அத்தியாவசிய மளிகைப் பொருட்களை கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இல்லத்தரசிகளும் நுகர்வோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
=====