

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் ராஜ்மோகன், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்திரமோகன் மற்றும் கல்வி உயர் அலுவலர்களோடு பள்ளிக்கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பாடநூல்கள் வெளியீடு
இவ்வாய்வு கூட்டத்தில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்களை அமைச்சர் வெளியிட்டார்.
மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பு
மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடல்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களது உடல் இயக்க திறன்கள் (Motor skills). சமூக மனவெழுச்சித் திறன்கள். விழுமியங்கள், வாழ்க்கை திறன்களை உள்ளடக்கிய பாடப்பொருட்களோடு அழகிய வண்ண வடிவமைப்புடன் இப்பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பள்ளி திறக்கும் போது புத்தகங்கள் வழங்கல்
பள்ளி திறக்கப்படும் நாளன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில்...
தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு தயார்நிலையில் வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.
ஜூன் 1 முதல் 3 வரை பயிற்சி
இக்கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தும் நிலையில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி 01.06.2026 முதல் 03.06.2026 வரை நடைபெறும்.
ஜூன் 4 முதல் வகுப்புகள் தொடக்கம்
ஜூன் 4ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 10ம் வகுப்பு ரிசல்ட்
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 20ஆம் தேதியான நாளை வெளியாகும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
----------------------