

சிறப்பு தீவிர திருத்தம்
SIR Form Fill Up Online Registration in Tamil Nadu : அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவங்களை கொடுத்து, பின்னர் அவற்றை பெற்றுக் கொள்கிறார்கள்.
வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடவடிக்கை
இது தொடர்பாக பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. 2002-2005 காலகட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து, தற்போது சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
SIR படிவத்தை நிரப்பும்போது வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்களை விரிவாக பார்க்கலாம்.
1. SIR, 2002/2005 வாக்காளர் பட்டியலில் என் பெயர் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
* SIR 2002/2005 வாக்காளர் பட்டியலில் உங்கள் விவரங்களை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம், தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று பெயரை பதிவிட்டு தேடலாம். வாக்காளர் பட்டியல் PDF வடிவிலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
2. 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களித்திருந்தாலும், SIR 2002/2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் என்ன செய்வது?
* அவ்வாறு இருந்தால், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் வாக்காளர் அட்டை விவரங்களைத் தேடி அதன் அடிப்பையில் நிரப்பலாம்,
3. வாக்காளர் அட்டையில் தவறான புகைப்படம் அல்லது பழைய புகைப்படம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
* SIR படிவத்தில் உங்களது புதிய புகைப்படத்தை ஒட்டி தவறினை திருத்திக் கொள்ளலாம்.
4. நிரப்பட்ட SIR படிவத்தைப் பெற வாக்குச்சாவடி அலுவலர் எப்போது வருவார்?
* வாக்குச்சாவடி அலுவலர் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் உங்கள் வீட்டிற்கு மூன்று முறை வருவார். அப்போது நீங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை வழங்கலாம்.
5. 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர் இப்போது பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க முடியுமா?\
* 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர், கணக்கெடுப்பின் போது பெறப்பட்ட படிவம் 6-ஐ உறுதிமொழிப் படிவத்துடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
* 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது நிறைவடையும் வாக்காளர்களும், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.
7. SIR படிவத்தை நிரப்ப எனக்கு தேவைப்படும் உதவியை யார் மூலம் பெறலாம்?
* வாக்காளர்கள் கட்டணமில்லா உதவி எண் - 1950-ஐ தொடர்பு கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள ’Book a Call with BLO’ வசதியையும் பயன்படுத்தலாம்.
8. SIR படிவத்தை இணையதளத்தில் பூர்த்தி செய்ய வசதி இருக்கிறதா?
* https://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் SIR படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
9. இணையதளத்தில் SIR படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கான செயல்முறைகள் என்ன?
* வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் OTP- ஐ உள்ளிட்டு தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உள்நுழைந்த பிறகு, "Fill Enumeration Form" பகுதியை கிளிக் செய்து தகவல்களை பதிவு செய்யலாம்.
* அதன்பிறகு டிஜிட்டல் சைன் பகுதியை நிரப்பி விட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். குறிப்பாக வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவு இரண்டிலும் உள்ள பெயர்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
10. ஒரு குடும்பத்தில் அனைவரும் வெளியூரில் இருந்தால், படிவத்தை எப்படி சமர்ப்பிக்க வேண்டும்?
* https://voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
11. SIR படிவங்கள் திரும்பப் பெறப்படா விட்டால் என்ன ஆகும்?
* வாக்குச்சாவடி அலுவலர் அருகிலுள்ள வாக்காளர்களிடம் விசாரித்து, SIR படிவங்களைத் திருப்பிச் சமர்ப்பிக்காத வாக்காளரை இல்லை என்றோ/இறந்துவிட்டதாகவோ அல்லது இடம் மாற்றம் செய்து விட்டதாகவோ அல்லது போலி வாக்காளரோ என்பதை உறுதி செய்து கொள்வார். அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும்.
12. என்னென்ன ஆவணங்களை விண்ணப்பத்தோடு சமர்ப்பிக்க வேண்டும்?
* அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், தேசிய குடிமக்கள் பதிவேடு, நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுக்கான ஆவணம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்...
13. வாக்காளரில் ஒருவர் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் வேலை பார்த்தால் என்ன செய்வது?
* அந்த வாக்காளரின் குடும்பத்தில் ஒருவரே அவரது படிவத்தை நிரப்பி, கையெழுத்திட்டு வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம்.
இவ்வாறு தேவைப்படும் விவரங்களை வழங்கி, SIR படிவத்தை சிறப்பான முறையில் பூர்த்தி செய்து கொடுத்து, வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதன் மூலம் நமது ஜனநாயக உரிமை பாதுகாக்கப்படும். இந்திய ஜனநாயகமும் மேலும் வலுப்பெறும்.
========================