

திமுக கூட்டணியில் சலசலப்பு
DMK Congress Alliance 2026 : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் சலசலப்பு தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. அதிகாரத்தில் பங்கு, அதிக இடங்கள் என காங்கிரஸ் குடைச்சல் கொடுக்கிறது. மற்ற கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கின்றன.
கடுப்பேற்றும் காங்கிரஸ்
ஆட்சியில் பங்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தாலும், அதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்வினை ஆற்றி, கடுப்பேற்றி வருகிறார்கள்.
தவெக பக்கம் சாயுமா காங்கிரஸ்!
அதிகாரத்தில் பங்கு என்று தவெக போட்ட பாம், கூட்டணிகளில் வெடித்து வருவதாக கலாய்ந்த விஜய், இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று பொடி வைத்து, காங்கிரசை மறைமுகமாக அழைக்கிறார்.
ஒருவேளை காங்கிரஸ் தவெக கூட்டணிக்கு போனால், அதனால் திமுக கூட்டணிக்கு என்ன இழப்பு ஏற்படும் என்று திமுக கணக்கெடுத்து இருக்கிறது.
கறார் காட்டும் ராகுல், பிரியங்கா
கூட்டனி விவகாரத்தில் திமுக சொல்வதை சோனியா காந்தி முழு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் சொல்வதையும் திமுக ஏற்க கொள்ள வேண்டும் என உறுதி காட்டுவதாக கூறுகிறார்கள்.
காங். எதிர்பார்ப்பு 42, திமுக சாய்ஸ் 30
ஆட்சியில பங்கு என்பதே கூடுதல் தொகுதிகளை பெற காங்கிரஸ் போட்ட கணக்கு என்கிறார்கள். அதாவது அந்தக் கட்சி எதிர்பார்ப்பது 42 தொகுதிகள்.
திமுகவின் முடிவோ அதிகபட்சம் 30 தொகுதிகள் தான். இந்தப் பிரச்னையில் திமுக பக்கம் சோனியா நிற்கிறார். ராகுல், பிரியங்கா ஏற்க மறுக்கிறார்கள்.
இரண்டுபட்டு கிடக்கும் காங்கிரஸ்
கூடுதல் தொகுதிகளை பெற்றால் தான் காங்கிரஸ் தமிழகத்தில் வளரும் என்று ராகுல் நினைக்கிறார். ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திமுகவை ஆதரிப்பதால், கட்சி இரண்டாக உடையும் அபாயமும் இருக்கிறது.
இந்த பிளானுக்கு திமுகவும் தயாராக இருக்கிறது. அதனால்தான் முதல்வரே ‘‘கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. அது காங்கிரஸுக்கு தெரியும்’’ என்று சொன்னதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் சபரீசன்
இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆலோசனை மேற்கொண்டார் சபரீசன். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் அவர் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
விஜய் செல்வாக்கு - கருத்து கேட்கும் திமுக
விஜய்க்கு 20 சதவீதம் ஓட்டு இருக்கிறதா? உங்க பகுதியில் எப்படி இருக்கு? என சபரீசன் கேள்விகளை முன்வைக்க, விஜய்க்கு 20 சதவீதம் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு இங்கே ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.
தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய கடலோர பெர்னாண்டோ பிரிவு மக்களிடம் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. திமுக வாக்கு வங்கியை விஜய் செல்வாக்கு பாதிக்காது என்று கூறி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் வேண்டவே வேண்டாம்
காங்கிரஸ் கட்சி நம் கூட்டணியில் இருக்க வேண்டுமா? என்ற முக்கியமான கேள்வியை சபரீசன் கேட்டிருக்கிறார். அதற்கு மெஜாரிட்டி நிர்வாகிகள் ‘‘காங்கிரஸ் நமக்கு வேண்டாம். அவர்கள் இல்லாமலேயே வெற்றி பெறலாம் என உறுதியளித்து இருப்பதாக தெரிகிறது.
காங்கிரசால் லாபமில்லை
காங்கிரசுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தான் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் திமுகவின் ஆதரவு அந்தக் கட்சிக்கு தான் அவசியம். எனவே, காங்கிரசால் நமக்கு லாபமில்லை.
காங்கிரஸ் இல்லாமல் வெற்றி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் வாக்குக்கு கொடுக்கிற பணத்தை அதிகப்படுத்தினால், அங்கேயும் வெற்றியை ஈட்டுவது சுலபம் என்று சபரீசனிடம் திமுக நிர்வாகிகள் கூறி இருக்கிறார்களாம்.
களநிலவரம் - திமுக உற்சாகம்
இதை முதல்வரிடமும் தெரியப்படுத்தி இருக்கிறார் சபரீசன். எனவே, 22ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு வரும்போது, கள நிலவரத்தை புட்டுபுட்டு வைக்க காத்திருக்கிறது திமுக.
காங்கிரஸ் கோர்ட்டில் ‘பந்து’
கொடுப்பதை ஏற்றால் கூட்டணியில் தொடரலாம், இல்லை என்றால் வெளியேறலாம் என காங்கிரசை ஓரம் கட்ட திமுக தயாராகி விட்டது என்கிறது அறிவாலய வட்டாரம்.
எனவே, திமுக கொடுப்பதை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைப்பதா என்ற முடிவை எடுக்கும் பந்து, காங்கிரஸ் பக்கம் திருப்பி விடப்பட்டு இருக்கிறது.
====================